சிவகங்கை: சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில், ஜோதிடருக்கு 200 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (52). ஜோதிடர். இவரிடம் கடந்த 2021ம் ஆண்டு, ஒரு பெண் தன்னுடைய 18 வயது மற்றும் 14 வயதுடைய மகள்களுடன் ஜோதிடம் பார்க்க வந்துள்ளார். இருவரும் சரியாக படிக்கவில்லை என பெண் கூறியுள்ளார். இதனையடுத்து இருவருக்கும், பரிகார பூஜை செய்ய வேண்டும் என ஜோதிடர் கூறியுள்ளார். இதை நம்பிய அந்த பெண், மகள்களுடன் ஜோதிடர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை ஒரு அறையில் தனியாக இருக்கும்படி கூறிவிட்டு, இரண்டு சிறுமிகளையும் மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்று ஜோதிடர் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த தகவலை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்றும், அவ்வாறு தெரிவித்தால் தாயும், தந்தையும் இறந்து விடுவார்கள் என்றும் கூறியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமிகள் இருவரும், யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளனர். இரண்டு சிறுமிகளுக்கும் அடிக்கடி உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கணக்கில் உடல்நலப் பாதிப்பு தொடர்ந்ததால், இருவரையும் மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை செய்துள்ளனர். அதில் பால்வினை நோயால் சிறுமிகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சிறுமிகளிடம் விசாரித்தபோது, ஜோதிடர் பலாத்காரம் செய்ததை தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஜோதிடர் ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.
இந்த வழக்கை சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன் விசாரித்து ஜோதிடர் ராமகிருஷ்ணனுக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் விதித்தார். பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். சிவகங்கையில் போக்சோ நீதிமன்றம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் முதல் முறையாக ஒரு குற்றவாளிக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
