விழுப்புரம்: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் ஜெய்சங்கர். இதற்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் காவல் நிலையத்தில் 2022ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். மேலும் கெடார் இன்ஸ்பெக்டர் பொறுப்பும் வகித்தார். அப்போது கெடார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூரப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜாவுக்கும், மற்றொரு தரப்புக்கும் ஏற்பட்ட முன்விரோத தகராறு தொடர்பாக கெடார் போலீசார் இருதரப்பு மீதும் வழக்குப்பதிவு செய்தனர். அடுத்த இரு தினங்களில் ராஜா தற்கொலை செய்து கொண்டார். அப்போது ராஜாவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு இன்ஸ்பெக்டராக இருந்த ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார், தற்கொலைக்கு தூண்டியதாக இருவரை கைது செய்தனர்.
இந்நிலையில் தற்கொலை வழக்கை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் சரியாக புலன் விசாரணை செய்யவில்லை என்று கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் பணியில் சேர்ந்த அவர் தற்போது கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் பணியாற்றி வருகிறார். இதனிடையே வாலிபர் தற்கொலை வழக்கில் சரியாக புலன் விசாரணை செய்யாத குற்றச்சாட்டு குறித்து விழுப்புரம் சரக டிஐஜி அலுவலகத்திலிருந்து, டிஜிபிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் டிஜிபி வெங்கட்ராமன் அறிவுறுத்தலின் பேரில் சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரை டிஸ்மிஸ் செய்து விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு நேற்று உத்தரவிட்டுள்ளார்.
