திருவனந்தபுரம்: அடூர் பார்த்தசாரதி கோயிலில் 2 கிறிஸ்தவ பாதிரியார்கள் தரிசனம் செய்ததில் ஆச்சார விதிமீறல்கள் எதுவும் நடைபெறவில்லை என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டம் அடூரில் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி கோயில் உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு இந்தக் கோயிலில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு நடைபெற்ற பேரணியை தொடங்கி வைப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த சக்கரியாஸ் என்ற பாதிரியார் உள்பட 2 கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி இருவரும் வந்து பேரணியை தொடங்கி வைத்தனர். அதன் பிறகு கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்ய பாதிரியார்கள் இருவரும் விரும்பினர். இதற்கு கோயில் தந்திரியும் அனுமதியளித்தார். இதைத் தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற பாதிரியார்கள் இருவரும் தரிசனமும் செய்தனர். இந்நிலையில் இதை எதிர்த்து சனில் நாராயணன் நம்பூதிரி என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில், கிறிஸ்தவ பாதிரியார்களை கோயிலுக்குள் அனுமதித்ததில் ஆச்சார விதிமீறல்கள் நடந்துள்ளன. எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகளான ராஜா விஜயராகவன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், பாதிரியார்களை கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதித்ததில் எந்த ஆச்சார விதிமீறல்களும் நடைபெறவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கோயிலில் நடைபெறும் காரியங்களில் தந்திரி தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். தந்திரியின் அனுமதி பெற்றுத்தான் பாதிரியார்கள் இருவரும் தரிசனம் செய்துள்ளனர். எனவே இதில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
