31 ஆண்டு பழைய வழக்கில் பீகார் சுயேட்சை எம்பி பப்பு யாதவ் கைது

பாட்னா: பீகார் மாநிலம், பூர்ணியா தொகுதி சுயேட்சை எம்பி ராஜேஷ் ரஞ்சன் என்ற பப்பு யாதவ். இவர் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு நேற்று முன்தினம் பாட்னாவுக்கு வந்தார். வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் இருந்த பப்பு யாதவை போலீசார் கைது செய்தனர். பின் பாட்னா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 2 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறியதை அடுத்து பாட்னா மருத்துவ கல்லூரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பப்பு யாதவ், ‘‘சமீபத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவியின் மரணம் போன்ற சம்பவங்களைக் கையாளுவதில் அரசின் திறமையின்மையை நான் சுட்டிக்காட்டி வருகிறேன். இதற்காகவே என் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்றார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில், பாட்னாவில் நீட் தேர்வு எழுதிய மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை எழுப்பியதால் பப்பு யாதவ் மீது பழிவாங்கும் நடவடிக்கையை நிதிஷ் அரசு மேற்கொண்டுள்ளது. இது பொறுப்பு கூறலை கோரும் ஒவ்வொரு குரலையும் அச்சுறுத்தி மவுனமாக்குவதற்கான நோக்கமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: