புதுக்கோட்டை அருகே தெரு விளக்குகள் எரியாததால் நம்மாழ்வார், காமராஜர் நகர் இரவில் இருளில் மூழ்கும்அவலம்

புதுக்கோட்டை, டிச.5: புதுக்கோட்டை அருகே உள்ள நம்மாழ்வார்நகர், காமராஜர்நகர் பகுதியில் தெரு விளக்குகள் எரியாததால் கிராம மக்கள் இருளில் தவிக்கின்றனர். புதுக்கோட்டை அருகே உள்ள சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்துக்குட்பட்டது நம்மாழ்வார்நகர், காமராஜர்நகர், நெசவாளர் காலனி 50 வீடு பகுதி. இப்பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 800க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். நம்மாழ்வார்நகரில் சுமார் 15 இடங்களில் தெரு மின்விளக்குகள் உள்ளன. இதில் 2 தெரு விளக்குகள் மட்டுமே எரிகின்றன. மீதமுள்ள 13 தெரு விளக்குகள் எரியாததால் இரவில் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதேபோல் காமராஜர்நகரிலும் சுமார் 20க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரியாமல் உள்ளதால் அப்பகுதி மக்கள் இருளில் தவிக்கின்றனர். தற்போது மழை பெய்து செடிகள் அதிகம் வளர்ந்துள்ளதால் விஷஜந்துகள் நடமாட்டம் உள்ளது.

மேலும் நாய்கள் தொல்லையும் உள்ளது. இதனால் இரவில் தெருவிளக்குகள் எரியாததால் கிராம மக்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை உள்ளது. தெருவிளக்குகள் எரியாதது குறித்து சேர்வைக்கரன் மடம் பஞ்சாயத்து அலுலவலகத்தில் பொதுமக்கள்  பலமுறை நேரில் சென்று புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அலைக்கழிக்கப்படுவதாக தெரிவித்தனர். மேலும் இப்பகுதியில் சாலை வசதியும் முறையாக இல்லை. எனவே, கிராம மக்களின் நலன் கருதி நம்மாழ்வார்நகர், காமராஜர்நகர் பகுதியில் தெருவிளக்குகள் எரிய பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன், சாலை வசதியும் ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: