புதுக்கோட்டை, டிச.5: புதுக்கோட்டை அருகே உள்ள நம்மாழ்வார்நகர், காமராஜர்நகர் பகுதியில் தெரு விளக்குகள் எரியாததால் கிராம மக்கள் இருளில் தவிக்கின்றனர். புதுக்கோட்டை அருகே உள்ள சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்துக்குட்பட்டது நம்மாழ்வார்நகர், காமராஜர்நகர், நெசவாளர் காலனி 50 வீடு பகுதி. இப்பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 800க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். நம்மாழ்வார்நகரில் சுமார் 15 இடங்களில் தெரு மின்விளக்குகள் உள்ளன. இதில் 2 தெரு விளக்குகள் மட்டுமே எரிகின்றன. மீதமுள்ள 13 தெரு விளக்குகள் எரியாததால் இரவில் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதேபோல் காமராஜர்நகரிலும் சுமார் 20க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரியாமல் உள்ளதால் அப்பகுதி மக்கள் இருளில் தவிக்கின்றனர். தற்போது மழை பெய்து செடிகள் அதிகம் வளர்ந்துள்ளதால் விஷஜந்துகள் நடமாட்டம் உள்ளது.