ஆறுமுகநேரி, பிப்.13: சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு டிசிடபிள்யூ நிறுவனத்தின் செயல் உதவித் தலைவர் ஜெயக்குமார்(பணியகம்) தலைமை வகித்தார். தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் சென்ற வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு வண்ண ஸ்டிக்கர் ஒட்டும் பணியை துவக்கி வைத்தார். விழாவில் நிறுவனத்தின் மூத்த பொது மேலாளர்கள், பொது மேலாளர்கள் மற்றும் அனைத்து துறை தலைவர்களும் பங்கேற்றனர். ஏற்பாடுகளை டிசிடபிள்யூ நிறுவனத்தின் பாதுகாப்பு துறையினர் செய்திருந்தனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டிகள் நடந்தன. வ.உ.சி கல்லூரி முன்பு புறப்பட்டு தருவை மைதானம் வந்தடைந்தது. போட்டியை எஸ்பி., முரளிராம்பா, கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் திரளான பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். மாரத்தான் ஓட்டம் முக்கிய வீதிகளின் வழியாக வந்து முத்துநகர் கடற்கரையை அடைந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு தூத்துக்குடி டிஎஸ்பி., பிரகாஷ் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இதில் மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் ரேணியஸ் ஜேசுபாதம், காவல் கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் ஜென்சி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சிசில்,எஸ்ஐகள் ரவிக்குமார், மயிலேறும் பெருமாள் மற்றும் காவல்துறையினர், மாணவ, மாணவியர், அரிமா, ஜேசீஸ் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் என்.எஸ்.எஸ்.திட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா 2 நாட்கள் நடந்தது. கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக டிப்போ கிளை மேலாளர் ரமேசன் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார். பின்னர் அவர் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி பேசினார்.