நெல்லை, ஜன. 22: புதூர் வாகைகுளம் கண்மாய் கரையோரம் அமைந்துள்ள கரையடி அம்மன் கோயிலில் உலக நன்மைக்காக பவுர்ணமி வழிபாடு நடந்தது. இதில் திரளாகப் பங்கேற்ற பக்தர்கள் கூட்டு வழிபாடு நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம், புதூர் வாகைகுளம் கண்மாய் கரையோரம் அமைந்துள்ள கரையடி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி பவுர்ணமி வழிபாடு நடந்தது. இதையொட்டி கருப்பசாமிக்கும், அம்மனுக்கும் மாப்பொடி, மஞ்சட்பொடி, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநி, அன்னம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிசேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் புதூர் வாகைகுளம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகப் பங்கேற்று பருவமழை தவறாமல் பெய்து பூமி செழிக்கவும், விவசாயிகள் உள்ளிட்ட அனைவரது வாழ்வில் ஏற்றம்பெறவும், தரணியில் அமைதி, மகிழ்ச்சி நிலவவேண்டியும் கூட்டு வழிபாடு நடத்தினர்.