மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 106 மாணவர்கள், ஆற்கடுகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 103 மாணவர்கள், அருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 66 மாணவர்கள் என 3 பள்ளிகளிலும் சேர்த்து மொத்தம் 275 மாணவர்கள் பிளஸ் 1 பயின்று வருகின்றனர்.

இவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா அந்தந்த பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் சுகானந்தம் தலைமை தாங்கினார். விழாவில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 275 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கினார். இதில் ஒன்றிய திமுக செயலாளர் கூளூர் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மணிகண்டன், கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவொற்றியூர்: திருவொற்றியூர், பெரியார் நகரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பஞ்சநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கே.பி.சங்கர் எம்.எல்.ஏ பங்கேற்று 149 மாணவர்கள் மற்றும் 167 மாணவிகள் என 316 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். அப்போது மாணவ, மாணவியர்களின் கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்காக முதல்வர் செய்து வரும் பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டு எம்எல்ஏ விளக்கினார். மேலும் நன்றாக படிக்க வேண்டும், தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பிடிக்கும் வகையில் திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில், கவுன்சிலர் சொக்கலிங்கம், பள்ளி ஆசிரியர்கள், திமுக நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் appeared first on Dinakaran.

Related Stories: