ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் கட்டிடம், சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

பெரியபாளையம்: ஆரணி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டித் தர மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சி ஜிஎன் செட்டி தெருவில் ஆரணி ஆற்றின் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் வளாகத்தில் 3 கான்கிரீட் கட்டிடம், 1 பழைய சீமை ஓடு கட்டிடம் என 4 கட்டிடங்கள் இருந்தன. அதில் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய சீமை ஓடு கட்டிடம் பழுதடைந்ததால் இந்த கட்டிடம் அகற்றப்பட்டது.

இந்தநிலையில் 3 கட்டிடங்கள் தற்போது அங்கு செயல்பட்டு வருகின்றன. இதில் பழைய ஓடு போட்ட கட்டிடத்தை அகற்றியபோது அங்கிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அடிக்கடி பள்ளிக்குள் விஷப் பாம்புகள் புகுவதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர். இதுகுறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் பள்ளியைச் சுற்றி சுற்றுச்சுவர் மற்றும் கூடுதல் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என 3 முறை எம்எல்ஏவிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆரணி ஆற்றங்கரை அருகே இப்பள்ளி அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் ஆரணி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடும்போது மாணவர்கள் தண்ணீரை வேடிக்கை பார்க்கச் சென்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றனர்.

The post ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் கட்டிடம், சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: