கொடைக்கானல் : வார இறுதி நாளான நேற்று கொடைக்கானலில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.மலைகளின் இளவரசி கொடைக்கானலில் கடந்த இரண்டு தினங்களாக சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மலை முழுவதும் வழக்கத்தை விடவும் அதிகமாக குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. வார இறுதி நாளான நேற்று சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் முக்கிய இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்தனர். மோயர் பாய்ண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை, பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா என அனைத்து பகுதிகளிலும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் நிரம்பியது. மோயர் பாய்ண்ட் பகுதியில் மலையை மறைக்கும் மேகக்கூட்டத்தை ரசித்தபடி செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கும் பல வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் சில இடங்களில் வாகன போக்குவரத்து நெருக்கடி நிலவியது. வியாபாரிகள் கூறுகையில், ‘‘கொடைக்கானலில் எப்போதுமே வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக இருக்கும். மற்ற நாட்களில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும்.
அதுபோன்ற நாட்களில் சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொரு இடங்களாக சென்று நெரிசலின்றி ரசித்துச் செல்வார்கள். மலைப்பகுதியில் தற்போது காற்று, சாரல், மேகமூட்டம் ஆகிய சூழல் மாறி மாறி நிலவி வருகிறது. இந்த இதமான சூழலை சுற்றுலாப் பயணிகள் அனுபவித்து செல்கிறார்கள்’’ என்றனர்.
The post குளிரும், சாரலும் கூட்டணியால் ஈர்க்குது ‘கொடை’ appeared first on Dinakaran.
