வெளிப்படையாக அல்லது மறைமுக கூட்டணியாக வந்தாலும் சரி அதிமுக, பாஜவுக்கு எந்த தொகுதியிலும் டெபாசிட் கிடைக்கக்கூடாது: வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: அதிமுகவும் பாஜவும் வெளிப்படையான கூட்டணியாக வந்தாலும் சரி-மறைமுக கூட்டணியாக வந்தாலும் சரி, தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய, திருவள்ளூர் மேற்கு, சென்னை கிழக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை வடக்கு, சென்னை மேற்கு, சென்னை தெற்கு, சென்னை தென்மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு ஆகிய 11 திமுக மாவட்டங்களின் 12 ஆயிரம் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்ற ‘‘வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம்’’ திருவள்ளூரில் உள்ள கலைஞர் திடலில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் உடல்நிலை காரணமாகக் காணொலி மூலமாக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது: திடீரென்று காய்ச்சலும் – தொண்டை வலியும் எனக்கு ஏற்பட்டுவிட்ட காரணத்தால் இந்த நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்து உங்களை எல்லாம் சந்தித்து உரையாற்றாமல் போனதற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கூட்டத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் – தனித்தனியாக சொல்ல வேண்டும் என்று ஆசை, ஆனால் தொண்டை சரியில்லை.

ஒட்டுமொத்த அத்தனை பேருக்கும், இதில் உண்மையாக பாடுபட்டு பணியாற்றிய நம்முடைய கட்சி உடன்பிறப்புகள், சகோதரர்கள், நண்பர்கள், நிர்வாகிகள், பல்வேறு அணிகளைச் சார்ந்தவர்கள், மாவட்டச் செயலாளர்கள் என அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது என்னுடைய பேச்சைச் சுருக்கமாக உதயநிதி ஸ்டாலினை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்த முதல்வரின் உரை வருமாறு: வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்களான நீங்கள்தான் உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் வாக்காளர்களுக்கும், நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கும் முழுப் பொறுப்பு.

உங்களை நம்பித்தான் ‘நாற்பதும் நமதே! நாடும் நமதே!’ என்று கம்பீரமாக முழங்குகிறோம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் என நமது திராவிட மாடல் அரசின் எல்லாத் திட்டங்களையும் நான் விளக்கமாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவையெல்லாம் உங்களுக்கே நன்றாகத் தெரியும். இதே மாதிரியான சாதனைகள் ஒன்றிய அளவிலும் நிகழ்த்தப்பட வேண்டும் என்றுதான் இந்தியா கூட்டணியை நாம் உருவாக்கியிருக்கிறோம்.

நாம் செய்த, செய்கிற சாதனைகளை மட்டும் சொல்லாமல், பாஜகவின் உண்மை முகத்தை வெளிப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டுக்காக எந்தச் சிறப்புத் திட்டத்தையும் கொண்டு வராமல் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜ அரசு வஞ்சிக்கிறது. பாஜவின் இந்தத் துரோகத்தையும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். பாஜவின் கைப்பாவையாக அத்தனை துரோகத்துக்கும் சுயநலத்துடன் துணை நின்றது, அடிமை அதிமுக. இன்றைக்குப் பிரிந்தது போல நாடகம் நடத்தும் இந்த கும்பலின் துரோகங்களைப் பட்டியல் போட்டு மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.

திமுகவும் இந்தியா கூட்டணியும் பாஜகவின் மக்கள் விரோத தன்மையை அம்பலப்படுத்துகிறது என்று தான், எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது பாஜக அதனால்தான், வருமான வரித்துறை ரெய்டு எல்லாம் நடைபெறுகிறது. ரெய்டுகள் மூலமாக அதிமுகவை மிரட்டி, நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து வாங்கியது போல் நம்மையும் மிரட்டலாம் என்று பகல்கனவு காண்கிறார்கள். இந்த சலசலப்புகளுக்கும் அச்சறுத்தல்களுக்கும் மிரட்டல்களுக்கும் பயப்படும் இயக்கமல்ல திமுக. 75 ஆண்டுகாலமாக இதையெல்லாம் எதிர்த்து நின்று தான் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்;

அந்த வெற்றி என்றைக்கும் தொடரும். வருமானவரித்துறைக்கும், அமலாக்கத்துறைக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும்தான் கண்களுக்குத் தெரிகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் அவரவர் அலுவலகத்தை விட்டு வெளியேகூட வருவதில்லை. ஆனால், இங்கு நம் தமிழ்நாட்டில், நம்முடைய இயக்கத்தினர் ஒவ்வொருவரையாகச் சோதனை செய்கிறார்கள். இப்போது அமைச்சர் வேலுவை சோதனை செய்கிறார்கள். இப்படி, வருமான வரித்துறை, அமலாக்கத்துறையின் ரெய்டுகளில், வழக்குகளில்- ‘‘Conviction Rate’’ எவ்வளவு என்று பார்த்தால், அவர்கள் விசாரிக்கும் வழக்குகளில் ஒரு விழுக்காடு கூட இல்லை.

வெறும் அரசியல் பழிவாங்கலுக்கான-பாஜகவின் கூட்டணிக் கட்சிகள்தான் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும்! அதனால்தான் வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மிக மிக முக்கியம் என்று சொல்கிறேன். இந்தத் தேர்தலில் நாம் பெறப்போகிற வெற்றி என்பது, மகத்தான வெற்றியாக இருக்க வேண்டும்.

கொள்கை என்று எதுவுமே இல்லாமல், ஊழல் மட்டுமே அச்சாணி என்று ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டை நாசப்படுத்திய அடிமை அதிமுகவும் தமிழ்நாட்டின் எல்லா உரிமைகளையும் பறித்து தமிழ்நாடு என்ற அடையாளத்தையே சிதைக்க நினைக்கும் பாஜகவும் சுயநலத்தின் காரணமாக இந்த இரு கட்சிகளுக்கும் துணை போகும் அதன் கூட்டணிக் கட்சிகளும்-வெளிப்படையான கூட்டணியாக வந்தாலும் சரி – மறைமுகக் கூட்டணியாக வந்தாலும் சரி, தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது.

இது, கலைஞரின் தொண்டர்களாகிய உங்கள் கையில்தான் இருக்கிறது. நாற்பதுக்கும் நாற்பது என்கிற வெற்றியை நாம் அடைந்தாக வேண்டும். திமுக உடன்பிறப்புகளாக நம்முடைய இலக்கு இதுதான். அதற்கு இன்று முதல் உழைத்தாக வேண்டும்! இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடித்தாக வேண்டும்! வளமிகு இந்தியாவை உருவாக்க வேண்டும்! அடுத்து வெற்றி விழா கூட்டத்தில் சந்திப்போம்! வாழ்க இந்தியா! வெல்க இந்தியா கூட்டணி. இவ்வாறு அவர் பேசினார்.

The post வெளிப்படையாக அல்லது மறைமுக கூட்டணியாக வந்தாலும் சரி அதிமுக, பாஜவுக்கு எந்த தொகுதியிலும் டெபாசிட் கிடைக்கக்கூடாது: வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: