திருச்செந்தூர் கோயிலில் நடிகை ரோஜா தரிசனம்

திருச்செந்தூர்: ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் நடிகை ரோஜா, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று இரவு சுவாமி தரிசனம் செய்தார். பிரதோஷத்தை முன்னிட்டு ஏகாந்த தரிசனம் செய்த அவர் மூலவர், சண்முகர் மற்றும் தட்சிணாமூர்த்தி சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது அவர் தெரிவித்ததாவது: திருச்செந்தூர் முருகனை பிரதோஷ நேரத்தில் தரிசனம் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. எனது ராசி பலனுக்கு குரு மாறியிருப்பதால் பிரதோஷ நாளில் தரிசனம் செய்ய வந்தேன். இந்தியாவின் சிறந்த முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி செயல்பட்டு வருகிறார். ஆந்திர மாநிலத்தின் நலன் மற்றும் வளர்ச்சி இரண்டையுமே இரண்டு கண்ணாக முதல்வர் பார்த்து வருகிறார்.

அதனால் உள்ளாட்சி தேர்தல் முதல் நாடாளுமன்ற தேர்தல் வரை நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் வாக்காளர்கள் அமோக ஆதரவு அளித்து வருகின்றனர். 2024-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 175/175 தொகுதிகளிலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெறும் என்றார். தொடர்ந்து அவரிடம் நடிகர் ரஜினிகாந்த் விவகாரம் குறித்த பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார். மேலும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுடன் மதுரையில் நடைபெற்ற திடீர் சந்திப்பு குறித்த கேள்விக்கு அமைச்சர் ரோஜா, குலவை விட்டு கிண்டல் செய்து பதிலளிக்காமல் சென்றார்.

The post திருச்செந்தூர் கோயிலில் நடிகை ரோஜா தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: