தர்மபுரி, நவ.30: தர்மபுரி மாவட்ட சந்தைகளில் பப்பாளிக்கு நல்ல விலை கிடைப்பதால், பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய இடங்களில் 300 ஏக்கர் பரப்பில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று ஆண்டிற்கு பலன் கிடைப்பதால் சொட்டுநீர் பாசனத்திலும் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் தோட்டக்கலைத்துறை சார்பில் பப்பாளி நாற்றுக்கு மானியம் தரப்படுவதால், விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நடவு செய்த 3 மாதங்களில் அறுவடை செய்யலாம். இலை தாக்குதல் நோய் இல்லையெனில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பலன் கிடைக்கும். குறிப்பாக ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நல்ல விலை கிடைக்கும். 15 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யப்படுகிறது.