ஆதார் அட்டைகளை புதுப்பிக்க சிறப்பு முகாம்

தர்மபுரி, மார்ச் 27: தர்மபுரி மாவட்டத்தில், 3 இடங்களில் ஆதார் அட்டைகளை புதுப்பித்து கொள்ள சிறப்பு முகாம் வரும் 30ம் தேதி நடக்கிறது. இதுதொடர்பாக தர்மபுரி கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. இதன்படி ஆதார் அட்டைதாரர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, தங்கள் ஆதார் அட்டைகளை புதுப்பித்து கொள்ள வேண்டும். கடந்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஆதார் அட்டைதாரர்கள், தங்கள் அடையாள சான்று, முகவரி சான்று ஆகியவற்றை புதுப்பித்து கொள்ள வேண்டும்.

இதற்கு வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள நிரந்தர ஆதார் சேவை மையத்தை அணுகலாம். இதேபோல் மை ஆதார் என்ற இணையதளத்திலும் புதுப்பித்து கொள்ளலாம். ஆதார் புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் மூலம் கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 3வது கட்டமாக, பாலக்கோடு ஒன்றியம் பேளாரஅள்ளி, காரிமங்கலம் ஒன்றியம் திண்டல், அரூர் ஒன்றியம் செல்லம்பட்டி ஆகிய 3 கிராமங்களில் வரும் 30ம் தேதி நடக்கிறது. இந்த சிறப்பு முகாமிற்கு வரும் பொதுமக்கள் ஆதார் அட்டைகளை புதுப்பிக்க தேவையான ஆவணங்களுடன் வர வேண்டும். புதுப்பித்தல் கட்டணமாக ரூ.50 செலுத்தி ஆதார் அட்டைகளை புதுப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: