மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.6.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

தர்மபுரி, மார்ச் 28: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 12 பயனாளிகளுக்கு ரூ.6.12 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை கலெக்டர் வழங்கினார். தர்மபுரி கலெக்டர்  அலுவலக கூடுதல் கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், உதவித்தொகைகள் கேட்டும் மொத்தம் 515 மனுக்கள் அளித்தனர். மனுக்களை பெற்றுகொண்ட கலெக்டர், துறை அலுவலர்களிடம் வழங்கி, தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வு காணும்படி உத்தரவிட்டார்.

கூட்டத்தில், தர்மபுரி வட்டார வணிக வள மையம், அரூர் வட்டாரம் சார்பில் 10 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் தனி நபர் தொழில் முனைவோர் கடன் உதவி, பசுமை வீடு திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான நிர்வாக அனுமதி ஆணையை கலெக்டர் வழங்கினார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மனு அளித்த தினமே மாற்றுத்திறனாளிக்கு ரூ.2,310 மதிப்பீட்டில் ஒளிரும் மடக்குக்குச்சி, கருப்பு கண்ணாடி, பிரௌலி கைகடிகாரம் என 12 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 12 ஆயிரத்து  310  மதிப்பிலான நல உதவிகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், டிஆர்ஓ அனிதா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சாந்தி, உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) தமிழரசன், பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர்  கண்ணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: