தர்மபுரி- திருவண்ணாமலை 4 வழிச்சாலை பணி தீவிரம்

தர்மபுரி, மார்ச் 27: தர்மபுரி- அரூர் வழியாக திருவண்ணாமலைக்கு 113 கிலோ மீட்டர் தூரம், 4 வழிச்சாலை ரூ.410 கோடியில் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. தற்போது 60 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தர்மபுரியில் இருந்து அரூர், திருவண்ணாமலைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால், தற்போது நான்கு வழி சாலையாக அமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தர்மபுரியில் இருந்து ஒடசல்பட்டி கூட்ரோடு, மொரப்பூர், அரூர், தீர்த்தமலை, தாணிப்பாடி வழியாக திருவண்ணாமலை வரை 113 கிலோமீட்டர் தூரம், புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.

தற்போது தர்மபுரி - அரூர் இரு வழிப்பாதையில் இருந்து 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. 7 மீட்டர் அகலம் கொண்ட நெடுஞ்சாலை நான்கு வழி சாலையின் போது 16.20 மீட்டர் அகலம் கொண்ட நான்கு வழி சாலையாக மாற்றப்படுகிறது. இந்த பணிகள் வேகமாக நடக்கிறது. தர்மபுரி - அரூர் வழியாக திருவண்ணாமலைக்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்  தொடங்கியது. மொத்தம் ரூ.410 கோடி மதிப்பீட்டில் இந்த சாலை அமைக்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக ரூ.313.50 கோடி மதிப்பீட்டில், தர்மபுரி- அரூர் வழி மொரப்பூர் சாலை வரை, இருவழிப்பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணியும், ரூ.96.50 கோடியில் அரூர் வழி தாணிப்பாடி-திருவண்ணாமலை சாலை வரை இருவழிப்பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணிகள் துரிதமாக நடக்கிறது.

தர்மபுரி- -திருவண்ணாமலை சாலை,  மொத்தம் 113 கிலோ மீட்டர் தூரம் ஆகும். இதில் தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 73 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்படுகிறது.

தர்மபுரி- அரூர் சாலை மதிகோன்பாளையம் அருகே ராஜாபேட்டை, குரும்பட்டி, சோலைக்கொட்டாய், கே.நடுப்பட்டி, மூக்கனூர், செம்மனூர் வனச்சாலை வரை 4 வழிச்சாலை விரிவாக்கப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தரைப்பாலம் அமைத்தல், தடுப்பு அமைத்தல், மண்கொட்டி சீர்படுத்தல் உள்ளிட்ட பணிகள் துரிதமாக நடக்கிறது. அடுத்தவாரம் தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்குகிறது. இதுவரை 60 சதவீத பணிகள் முடிந்துள்ளது.

எஞ்சியுள்ள பணிகள் 6 மாதத்தில் நிறைவு பெறும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி - அரூர் வழியாக திருவண்ணாமலைக்கு 4 வழிச்சாலை  அமைக்கும் பணிகள் துரிதமாக நடக்கிறது. ரூ.410 கோடி மதிப்பீட்டில், 52 இடங்களில் சந்திப்பு சாலை அமைக்கப்படுகிறது. 36 இடங்களில் பேருந்துகள் நின்று செல்வதற்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 99 சிறு பாலங்கள் கட்டி முடித்தும், கட்டப்பட்டும் வருகின்றன. தற்போது 60 சதவீத பணிகள் முடிந்துள்ளது,’ என்றனர்.

Related Stories: