தர்மபுரி, நவ.30:மாரண்டஅள்ளி அருகே டூவீலர் மற்றும் சரக்கு வாகனம் மோதியதில் 2 பேர் இறந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பாறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (50). விவசாயி. இவரது மகன் சுரேஷ் (28). இவர் மாரண்டஅள்ளி கொலாசன அள்ளியில் செயல்படும் தனியார் பால் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சுரேசுக்கு பெண் பார்க்க நேற்று மாரண்டஅள்ளி அருகே பெல்ரம்பட்டி பகுதிக்கு, டூவீலரில் சென்றுள்ளனர். சுரேஷ் ஓட்டிச் சென்ற டூவீலரில், அவரது தந்தை முருகன், வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த திருமண தரகர் மாரிமுத்து (55) ஆகியோரும் சென்றனர். பெண் பார்க்கும் நிகழ்ச்சி முடிந்த பின்னர், வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். கோட்டூர் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தபோது, பாலக்கோட்டில் இருந்து பெல்ரம்பட்டி நோக்கி வந்த சிறிய சரக்கு வாகனம், சுரேஷ் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதியது.