நிவர் புயல் எதிரொலியால் மாவட்டம் முழுவதும் மழை மரங்கள் முறிந்து விழுந்தன

தர்மபுரி, நவ.27: தர்மபுரி மாவட்டத்தில், நிவர் புயல் எதிரொலியால் விடிய, விடிய மழை பெய்தது. அப்போது மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நிவர் புயல் எதிரொலியாக, தர்மபுரி நகரில் விடிய, விடிய மழை பெய்தபடி இருந்தது. இதனால் சாலையோர காய்கறி, பழக்கடைகள் வைக்கவில்லை. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழையால் வாகனங்கள் இயங்கவில்லை. இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலை நேற்று வெறிச்சோடியது. சிட்லிங், பெரியபட்டி, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, பைரநாயக்கன்பட்டி, சிட்லிங் எஸ்.தாதம்பட்டி உள்ளிட்ட 6 மலைக்கிராமங்களின் வழியாக நேற்று மதியம் புயல் கடந்து சென்றது. இதனால் அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

மழைக்கு கோட்டப்பட்டி நெடுஞ்சாலையின் குறுக்கே மரங்கள் வேருடன் முறிந்து விழுந்தன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின் பேரில், தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, சாலையில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றினர். இதன் பின்னர் வாகனங்கள் வழக்கம்போல் சென்றன. தர்மபுரி மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் வருமாறு(மில்லி மீட்டரில்): அரூர் 44, பாப்பிரெட்டிப்பட்டி 27 , பென்னாகரம் 10, தர்மபுரி 9, ஒகேனக்கல் 7, பாலக்கோடு 4, மாரண்டஅள்ளி 2 என மொத்தம் 103 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.

Related Stories: