தர்மபுரி, நவ.27: மத்திய அரசை கண்டித்து, அனைத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்ட சிஐடியூ, ஏஐடியூசி, எல்பிஎப், ஐஎன்டியூசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பொது வேலை நிறுத்தப்போராட்டம், நேற்று பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடந்தது. போராட்டத்திற்கு சிஐடியூ மாநில செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். தொமுச அன்புமணி, சண்முகராஜ், சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியூசி மணி வரவேற்றார். ஐஎன்டியூசி தங்கவேல், ஏஐசிசிடியூ முருகன், ஐஎன்டியூசி ரமேஷ் உள்ளிட்ட பலர் கொட்டும் மழையில் குடைபிடித்து கலந்து கொண்டனர்.
கொரோனா தொற்றுகாரணமாக, கடந்த 8 மாதமாக வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு அரசு ₹7500 வழங்க வேண்டும். சிப்ஹாட் பணியை விரைவு படுத்த வேண்டும். மொரப்பூர் - தர்மபுரி ரயில் இணைப்பு பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.