பென்னாகரம், நவ.3: தர்மபுரி மாவட்ட திமுக, நிர்வாக காரணங்களுக்காகவும், கட்சி பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் 2 ஆக பிரிக்கப்பட்டு, தர்மபுரி மேற்கு மாவட்டம் உருவாக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பி.என்.பி இன்பசேகரன் எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கட்சி பணிகளை சிறப்பாக மேற்கொள்ள மாதையன், சூடப்பட்டி சுப்பிரமணி, மணி, காளியப்பன், துரைசாமி, ராஜகுமாரி, மணிவண்ணன் ஆகியோர் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, நேற்று மேற்கு மாவட்டத்திற்கு முதல்முறையாக வருகை புரிந்த மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரனுக்கு, காரிமங்கலம் எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தர்மபுரி நகரில் உள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பருவதனஅள்ளியில் உள்ள முன்னாள் எம்எல்ஏவும், அவரது தந்தையுமான பி.என்.பெரியண்ணன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.