கோவை, அக். 30: கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், காந்தியின் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ‘‘காந்திய மக்கள் யாத்திரை’’ என்னும் பாதயாத்திரை கடந்த 18-ந் தேதி துவக்கப்பட்டது. அதன்படி, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு வார்டுகளிலும் தினமும் யாத்திரை நடைபெற்று வருகிறது. காந்தியின் சிந்தனைகள், சொற்பொழிவுகள் போன்றவை இந்த யாத்திரையின்போது வெளிப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கோவை மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட தெப்பகுளம் மைதானத்தில் நேற்று மாலை இந்த யாத்திரை துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சஞ்சய் தத் இந்த யாத்திரையை துவக்கி வைத்தார்.