மேற்கு புறவழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த கருத்து கேட்பு

பொள்ளாச்சி, மார்ச் 19: பொள்ளாச்சி பகுதியில் மேற்கு புறவழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த நேற்று நடந்த பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தில் வீடுகளை அகற்ற பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொள்ளாச்சி நகரிலிருந்து பிரிந்து செல்லும் முக்கிய நெடுஞ்சாலை ரோடுகளில் ஒன்றாக கருதப்படும் பாலக்காடு ரோட்டில் பகல், இரவு நேரத்தில் தொடர்ந்து வாகன போக்குவரத்து உள்ளது. இந்த வழியாக நல்லூர், முத்தூர், மண்ணூர், ராமபட்டினம், கோபாலபுரம் மற்றும் கேரள பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் பொள்ளாச்சி கோவை ரோடு சக்தி மில்லிருந்து மீன்கரை ரோடு ஜமீன்ஊத்துக்குளி கைக்காட்டி வரையிலும் உள்ள ஒரு வழிபாதையை, இரண்டு வழி பாதையாக மேற்கு புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புறவழிச்சாலை அமையும் பட்சத்தில் எந்தெந்த பகுதியில் நிலம் கையகப்படுத்துவது? என சுமார் 5 மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

இந்நிலையில், புறவழிச்சாலை அமைய உள்ள ஆ.சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், தாளக்கரை, முத்தூர், நல்லூர் பிரிவு, ஜமீன்ஊத்துக்குளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் முதற்கட்ட கருத்துகேட்பு கூட்டம் பொள்ளாச்சி தாசில்தார் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இதற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் தலைமை தாங்கினார்.  திட்ட பிரிவை சேர்ந்த விஜயலட்சுமி, தாசில்தார் தனிகைவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கிராம மக்கள் தனித்தனியாக வரைவழைக்கப்பட்டு கருத்து கேட்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட பலரும் ‘‘ஆர்.பொன்னாபுரம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வீடுகளை இடிப்பதை தவிர்க்க வேண்டும். மக்களுக்கு பாதிப்படையும் வகையிலான பணியை பரிசீலினை செய்து நல்ல முடிவு எடுக்க வேண்டும். கிராம மக்களின் குடியிருப்பு மற்றும் இடையூறு இல்லாதவாறு, சாலை அமைக்க வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோவை ரோடு  சக்தி மில்லிலிருந்து, மீன்கரைரோடு ஜமீன்ஊத்துக்குளி பிரிவு வரையிலும் உள்ள சுமார் 9.2 கிலோ  தூரத்துக்கு வெவ்வேறு இடங்களில் ஒரு வழிச்சாலையை இரு வழிச்சாலையாக  அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.  கருத்துகேட்பு கூட்டத்தின்போது கலந்து கொண்ட பலரும், சாலை விரிவாக்கத்திற்காக கையப்படுத்தப்பட உள்ள தங்கள் நிலத்திற்கு உயர்த்தப்பட்ச தொகை கேட்டுள்ளனர். புறவழிச்சாலை விரைவில் துவங்க உள்ளதால் ஆட்சேபனை இருப்பவர்கள், தனியாக கடிதம் எழுதி கொடுக்க வேண்டும். கையகப்படுத்தப்படும் நிலத்திற்கும் உரிய இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: