தர்மபுரி, மார்ச் 13: தர்மபுரி அடுத்த குண்டல்பட்டி அருகே மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாகனங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து, 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மேம்பாலம் அமைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தர்மபுரி மாவட்டம் குண்டல்பட்டி அருகே தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்துக்கள் நடந்து உயிரிழப்பும் ஏற்பட்டது. இதையடுத்து குண்டல்பட்டி ெபங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்கள் சாலையை கடக்க முடியாதபடி சாலை மூடப்பட்டது. இதையடுத்து தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் வாகனங்கள், பழைய தர்மபுரி, சவுளுப்பட்டி வழியாக பெங்களுரு நோக்கி சென்றன. இதனால் முத்துப்பட்டி, கொளகத்தூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குண்டல்பட்டி அடுத்த கால்நடை ஆராய்ச்சி மையம் அருகே சென்று, தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர். இதனால் குண்டல்பட்டி சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.