தர்மபுரி அருகே அபகரிக்கப்பட்ட நிலம் வீட்டை மீட்டு தர கோரிக்கை

தர்மபுரி, மார்ச் 12: தர்மபுரி அருகே, வீடு மற்றும் நிலத்தை அபகரித்த தம்பியிடம் இருந்து மீட்டு தரக்கோரி, சினிமா பிரமுகர் எஸ்பியிடம் நேற்று புகார் மனு அளித்துள்ளார். நல்லம்பள்ளி அடுத்த தின்னஅள்ளி அருகே, கொமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லையன்(48). சினிமா தயாரிப்பு நிறுவனத்தில், உதவி மேலாளராக பணியாற்றி வந்த இவர், திவாகரன் தொடங்கிய அண்ணா திராவிட கழக கட்சியில் மண்டல பொறுப்பாளராக உள்ளார். நேற்று, இவர் தனது சகோதரி பழனியம்மாளுடன், தர்மபுரி மாவட்ட எஸ்பி ராஜனிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சென்னையில் கடந்த 25 ஆண்டுகளாக சினிமா துறையில் வேலை செய்தேன். இன்னும் திருமணம் ஆகவில்லை. நான் சம்பாதித்த பணத்தில் ₹20 லட்சத்தை எனது உடன்பிறந்த தம்பியிடம் அவரிடம் கொடுத்திருந்தேன். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன், எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடு கட்டி அதில் என் பொருட்களை வைத்திருந்தேன். பக்கத்து ஓட்டு வீட்டில் வசித்து வந்த தம்பி, வீட்டை பராமரிப்பு செய்வதாக கூறி எனது வீட்டில் குடியேறினார்.

இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்த நான், எனக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருந்த தம்பி மற்றும் அவரது மனைவியிடம், நான் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறி, நிலத்தை ஒப்படைக்குமாறு கேட்டேன். அப்போது, அவர்கள் இருவரும் உனக்கு இனி வீடும் இல்லை, நிலமும் இல்லை. எல்லாமே இனி எங்களுடையது தான் என்றனர். இதுதொடர்பாக நடந்த ஊர்பஞ்சாயத்தில், வீட்டை காலி செய்து தருவதாக பத்திரத்தில் எழுதி கொடுத்தார். ஆனால், இன்னும் வீட்டை காலி செய்யவில்லை. நிலத்தையும் ஒப்படைக்கவில்லை. இதை தட்டிக்கேட்ட எனது சகோதரி பழனிம்மாளையும், அவர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே, இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: