கடத்தூர் பகுதியில் மின் மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு

கடத்தூர், மார்ச் 10: கடத்தூர் அருகே தாளநத்தம் பகுதியில் மின் மோட்டாரை பயன்படுத்தி, குடிநீர் எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடத்தூர் அருகே தாளநத்தம் கிராம ஊராட்சியின் நொச்சிக்குட்டை தா.அய்யம்பட்டி, காவேரிபுரம், குண்டல்பட்டி, கோவில்வனம், காவேரிபுரம், மேலூர் உள்ளிட்ட பகுதியில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை மக்களின் குடிநீர் தேவைக்காக, ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தாளநத்தம் பகுதியில் சேர்ந்த ஒரு சிலர், குடிநீர் குழாயுடன் மின் மோட்டாரை இணைத்து, குடி நீரை உறிஞ்சி வருகின்றனர். இதனால் மற்ற இடங்களுக்கு தண்ணீர் செல்லும் வேகம் குறைந்து, பெரும்பாலான குடும்பங்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சிலர் விலை கொடுத்து கேன் தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மின் மோட்டாரை பயன்படுத்தி, குடிநீர் எடுக்கும் நபர்கள் மீது ஊராட்சி அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: