நந்தீஸ்வரமங்கலம் ஆர்பிஎம் மெட்ரிக் பள்ளியில் 10ம் ஆண்டு விழா

சேத்தியாத்தோப்பு, மார்ச் 6:சேத்தியாத்தோப்பு அடுத்த நந்தீஸ்வரமங்கலம் ஆர்பிஎம் மெட்ரிக் பள்ளியில் 10ம் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் துரை ராமலிங்கம் தலைமை தாங்கினார். சென்னை தொழிலதிபர் ஜானகிராமன், வழக்கறிஞர் பழனி மனோகரன், ஓய்வு பெற்ற விஏஓ கலியமூர்த்தி முன்னிலை வகித்தனர். பள்ளி நிறுவனர் பத்திராசலம் வரவேற்றார்.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

பாமக மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் தேவதாஸ் படையாண்டவர், பொன்னம்பலம் ஆகியோர் மாணவ, மாணவிகளை வாழ்த்தி பேசினர்.விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி, சிலம்பம், கராத்தே, கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் வாழ்த்தி பரிசு மற்றும் சான்று வழங்கி பாராட்டினார்.இதில், பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பள்ளி முதல்வர் அழகர்சாமி நன்றி கூறினார்.

Related Stories: