அரூர், மார்ச் 5: மொரப்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மொரப்பூரில், கடந்த 1861ம் ஆண்டில் ரயில் நிலையம் துவங்கப்பட்டது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கியமான ரயில் நிலையமாக திகழும் இங்கு, 10க்கும் மேற்பட்ட ரயில்கள் நின்று செல்கின்றன. இரு மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மொரப்பூர் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான கழிவறை, குடிநீர் வசதி, டிக்கெட் வாங்குவதற்கான கூடுதல் கவுண்டர்கள் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை. அவசர தேவைக்கு தண்ணீர் வாங்க கூட கடைகள் இல்லை. எனவே, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும், ரயில் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.