அரூர், மார்ச் 3: அரூர் பகுதியில் அதிக கரும்பு பாரத்தை டிராக்டர்களில் ஏற்றி செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, அரூர் அடுத்த கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆகிய இடங்களில், நடப்பு ஆண்டிற்கான கரும்பு அரவை தொடங்கியுள்ளது. அரூர் சர்க்கரை ஆலைக்கு அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, கம்பைநல்லூர், ஊத்தங்கரை, செங்கம், சிங்காரப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் கரும்பு லாரி, டிராக்டர் மூலம் அரவைக்கு கொண்டு வரப்படுகிறது. டிராக்டரில் அளவிற்கு அதிகமாக எப்போது சாய்ந்து விடுமோ என்ற நிலையில், கரும்பு ஏற்றி கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு வரும் டிராக்டர்கள், மின் கம்பியை உரசி கொண்டு செல்லும் வழியில், மின் கம்பிகள் அறுந்து விழுந்தும், டிராக்டர்கள் கவிந்தும் வருகிறது.