கோவை, பிப்.28: தென்னையில் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை பயன்படுத்த வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கோவை, பொள்ளாச்சி பகுதியில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதில், தற்போது பெரிய பிரச்னையாக வெள்ளை ஈ தாக்குதல் காணப்படுகிறது. இந்த ஈக்கள் இலைகளின் அடிப்பரப்பில் வட்டம் அல்லது சுருள் வடிவில் முட்டைகள் இடுகிறது. முட்டையில் இருந்து வெளியேறும் குஞ்சுகள், 30 நாட்கள் வரை இலையில் சாறு உறிஞ்சி, ஈக்களாக மாறியதும், பல்வேறு திசைகளில் பறந்து சென்று பயிர்களை தாக்கி வருகிறது. இந்த ஈக்கள் வெளிப்படுத்தும் பசை போன்ற கழிவு திரவம், இலைகளின் மேல் படர்ந்து, கரும்பூஞ்சாணம் வளர வழி செய்கிறது. இதனால், கருப்பாக மாறும் தென்னை ஓலையில் பச்சையம் செயலிழந்து மகசூல் குறைகிறது. இந்த பிரச்னை புதியதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால், வெள்ளை ஈக்கள் நடமாட்டத்தை கண்டறிந்து அவசர கால நடவடிக்கையை மேற்கொள்ள வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, அவசர கால தடுப்பு மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகள் இந்த ஈக்களை கவரும் தன்மை கொண்டது. இரு மரங்களுக்கு இடையில் 3 மீட்டர் நீளம் மற்றும் 1 மீட்டர் அகலம் என்ற அளவிலான பாலீத்தினை தரையிலிருந்து 5-6 அடி உயரத்தில் விளக்கு எண்ணெய் தடவி கட்ட வேண்டும். இதனால் பூச்சிகளின் எண்ணிக்கை கட்டுப்படும். 3 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து மீண்டும் விளக்கு எண்ணெய் தடவி விட வேண்டும். இம்மஞ்சள் நிற ஒட்டும் பொறியை ஒரு மரத்தைச் சுற்றியும் கட்டிவிடலாம். ஏக்கருக்கு 20 என்ற எண்ணிக்கையில் மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை கட்டிவிடலாம்.