தென்காசி சுடலை மாடசுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா திரளானோர் பங்கேற்பு

தென்காசி, பிப். 27: தென்காசி மேல்பகுதி சுடலை மாடசுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தென்காசி - இலஞ்சி சாலையில் மின்சார வாரியம் அலுவலகம் அருகே அமைந்துள்ள சுடலை மாடசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 24ம் தேதி காலையில் மங்களவாத்தியம், விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, கும்பபூஜை, மகாகணபதி ஹோமம், பூர்ணாஹுதி, கஜபூஜை, கோபூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், மாலையில் வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கிராம சாந்தி, கும்ப அலங்காரம், யாத்ரா தானம், கடம் யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜைகள், இரவில் திரவிய பூர்ணாஹுதி தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் காலை விசேஷ சந்தி, இரண்டாம் கால யாகசாலை பூஜை, மதியம் எஜமானர் வர்ணம், மூலமந்திர ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. மாலையில் 3ம் கால யாகசாலை பூஜை, இரவில் இயந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், தீபாராதனை நடந்தது.

கும்பாபிஷேக நாளான நேற்று (26ம் தேதி) காலையில் 4ம் கால யாகசாலை பூஜை, மூலமந்திர ஹோமம், நாடி சந்தானம், யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து காலை 9.40 மணிக்கு சுந்தர விநாயகர் விமானம், முக்கூடல் சுடலை மாடசுவாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், துணை தலைவர் சக்தி பாண்டியன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் சிறப்பு தீபாராதனை  நடந்தது. ஏற்பாடுகளை யாதவர் சமுதாய விழா கமிட்டியினர் மற்றும் இளைஞரணியினர்  செய்திருந்தனர்.

Related Stories: