களக்காடு, மார்ச்25: மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள மாயநேரியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் ஆறுமுகப்பெருமாள் (40). விவசாயி. இவர் நேற்று இரவு மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அம்பலம் கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும் அவரது மைத்துனரான கிட்டு என்ற கிருஷ்ணபெருமாளுக்கும் கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆத்திரம் அடைந்த கிருஷ்ணபெருமாள், ஆறுமுகப் பெருமாளை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஆறுமுகப்பெருமாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். பின்னர் கிருஷ்ணபெருமாள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் இது பற்றி மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆறுமுகப்பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக கிருஷ்ணபெருமாளை கைது செய்தனர். ஆறுமுகப்பெருமாள், கிருஷ்ணபெருமாளின் தங்கையான பெருமாள்பிள்ளையை காதல் திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
