சிவகிரி, மார்ச் 25: வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சியினர் முன் சரிபார்க்கப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்.23ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்குகிறது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 310 வாக்கு சாவடி மையங்களுக்கான 372 இயந்திரங்கள் மற்றும் 403 வாக்குப்பதிவு சீட்டு சரிபார்ப்பு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி நடந்தது.வாசுதேவநல்லூர் சட்டமன்றதேர்தல் நடத்தும் அலுவலர் பால்துரை, தாசில்தார் அப்துல்சமது, தேர்தல் பிரிவு தாசில்தார் ரவிகணேஷ் ஆகியோர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு அறைக்குள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதில், தேர்தல் பறக்கும் படை தனி தாசில்தார் மாரியப்பன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரஞ்சித் குமார், ஆர்ஐ கணேசன், (திமுக) கந்தவேல், (அதிமுக) முனியராஜ், (சிபிஐ) அருணாசலம், (பாஜ) தங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகியிடமிருந்து 15 டி-சர்ட், 20 போஸ்டர் பறிமுதல் வீரவநல்லூர், மார்ச் 25: வீரவநல்லூர் அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகியிடமிருந்து கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட 15 டி.சர்ட், 20 போஸ்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வீரவநல்லூர் புறவழிச்சாலையில் நேற்று மாலை பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரினை மறித்து சோதனை செய்ததில் காருக்குள் நாம் தமிழர் கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட டி-சர்ட் 15 மற்றும் 20 கட்சி போஸ்டர்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து அம்பை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் காரில் வந்தவர் சாத்தான்குளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பெருமாள்(24) என்பதும், நாம் தமிழர் கட்சி நிர்வாகி என்பதும் தெரியவந்தது.
