தர்மபுரி, பிப்.21: தர்மபுரி மாவட்டத்தில் கோடைக்கு முன்பே வெயில் சுட்டெரித்து வருவதால், பெரும்பாலான நீர்நிலைகள், வறட்சியின் கோரப்பிடியில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தை பொறுத்தவரை, முழுக்க முழுக்க விவசாயத்தையே பெரும்பாலான மக்கள் நம்பியுள்ளனர். மாவட்டத்தில் பெரிய ஆறுகள் எதுவும் இல்லாததால், அண்டை மாவட்டமான கிருஷ்ணகிரியில் ஓடும் தென்பெண்ணை ஆற்று தண்ணீரை பயன்படுத்தியே, ஒரு சில இடங்களில் பாசனம் செய்து வருகின்றனர். இதர பகுதிகள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. நன்கு மழை பெய்தால் மட்டுமே ஆங்காங்கே உள்ள ஏரிகளில் நிரப்பி வைத்து, அதன் மூலம் கிணறுகள் மற்றும் போர்வெல்களில் கிடைக்க கூடிய நீராதாரத்தையே ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் நிலை உள்ளது இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: மாவட்டத்தில் கோடைக்கு முன்பாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் பாசன திட்டங்கள் அனைத்தும் கானல் நீராகி விட்டது. தென்பெண்ணை ஆற்று நீரை எண்ணேகொல்புதூர் ஏரியில் இருந்து தும்பலஅள்ளி ஏரிக்கு கொண்டு வரும் திட்டம், உலியாளத்தில் இருந்து தூள்செட்டி ஏரிக்கு தென்பெண்ணை ஆற்று தண்ணீரை கொண்டு வரும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் கனவாகவே உள்ளது. இந்த திட்டங்களை நிறைவேற்றினால் மாவட்டத்தில் 75 சதவீத ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வரமுடியும். காரிமங்கலம் பகுதியில் தும்பல அள்ளி ஏரி, திண்டல் ஏரி, பைசுஅள்ளி ஏரி, அடிலம் ஏரி, பூமாண்டஅள்ளி ஏரி, காளப்பநாயக்கன அள்ளி ஏரி உள்ளிட்ட அனைத்து ஏரிகளுக்கும், மழை பெய்தபோது தண்ணீர் வந்ததோடு சரி. அதற்கு பின்பு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராததால், விவசாயிகள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.