கோவை, பிப்.20:கோவை மாவட்டத்தில் ஓட்டல், லாட்ஜ்களில் 106 தனியார் பார்கள் (எப்.எல் உரிமம் பெற்றது) இயங்கி வந்தது. கோர்ட் உத்தரவின்படி நெடுஞ்சாலைகளை ஒட்டியிருந்த 39 தனியார் ஏசி பார்கள் மூடப்பட்டன. இந்த பார்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்களை கலால் துறையினர் பறிமுதல் செய்து கவுண்டம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் குடோனில் ஒப்படைத்தனர். மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள், பார்கள் திறக்கப்பட்ட பின்னர் தனியார் ஏசி பார்களும் மீண்டும் பழைய படியே இயங்க துவங்கின. தனியார் பார்களை கலால் துறையினரும், டாஸ்மாக் நிர்வாகத்தினரும் கண்டுகொள்வதில்லை.இந்த பார்கள் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நகரில் உள்ள சில தனியார் ஏசி பார்கள் இரவு முழுவதும் செயல்பட்டு வருகின்றன.