கோவை, பிப். 19: தமிழகத்தில் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சி, விழாக்கள் உள்ளிட்ட அனைத்து வகை பேனர்கள் வைக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பல இடங்களில் விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு சென்னை குரோம்பேட்டை பவானி நகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது சாலையின் நடுவில் இருந்த அ.தி.மு.க. பேனர் விழுந்து விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரிய அளவிலான கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து விதிகளை மீறி பேனர் வைக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில்,கோவை அவினாசி சாலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகையொட்டி அ.தி.மு.க. கொடிக்கம்பம் சாலையில் வைக்கப்பட்டு இருந்தது. இதில், கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த கொடிக்கம்பம் சாலையில் விழுந்தது. இதன் காரணமாக அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜேஸ்வரி(22) என்ற இளம்பெண் விபத்தில் சிக்கினார். இதில், அவரின் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், அவரின் இடது கால் அகற்றப்பட்டது.