தர்மபுரி, பிப்.13: அரூர் அருகே சிட்லிங்கில், பழங்குடியினர் நிலத்தை அபகரித்ததாக கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் நேற்று மனு கொடுத்தனர்.தர்மபுரி மாவட்டம் சிட்லிங் ஊராட்சி, காளியான்கொட்டாய் கிராம மக்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: சிட்லிங் ஊராட்சிக்குட்பட்ட காளியான்கொட்டாய் மற்றும் நம்மங்காடு கிராமங்களில், சுமார் 700க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் காலியாக உள்ள சுமார் 2.2 ஏக்கர் நிலத்தை, முன்னோர்கள் காலத்தில் இருந்து கோயில் திருவிழா போன்ற பொது நிகழ்ச்சிகள் நடத்த பயன்படுத்தி வருகிறோம். இந்த இடத்தில் பழங்குடி மக்களுக்கு வீடுகள் ஒதுக்கி தர வேண்டும் என, கடந்த 2013ம் ஆண்டு மனு கொடுத்துள்ளோம். இதற்கிடையே, கடந்த 2017ம் ஆண்டு மலைவாழ் பழங்குடி இனத்தை சாராத ஒருவர், நாங்கள் பயன்படுத்தி வந்த நிலத்தை, அரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரயம் செய்ததாக தெரியவந்துள்ளது.