தர்மபுரி, பிப்.13: தர்மபுரி அருகே கெங்கான்கொட்டாயில், கோடைக்கு முன்னரே வறட்சி நிலவுவதால், விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயிரை காப்பாற்றும் அவலம் கடந்த 3 மாதமாக நிலவுகிறது.தர்மபுரி மாவட்டம், செட்டிக்கரை அருகே கெங்கான்கொட்டாய் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல், சோளம், ஆரியம், பருத்தி, அவரை, வெண்டைக்காய் போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு, மாவட்டத்தில் பருவமழை போதிய அளவிற்கு பெய்தாலும், பெரும்பாலான ஏரிகள் நிரம்பவில்லை. தர்மபுரி அருகே உள்ள ரெட்டேரி, செட்டிக்கரை ஏரி, நீலாபுரம் ஏரி, வெள்ளோலை ஏரி, குரும்பட்டி ஏரி உள்ளிட்ட இந்த பகுதியை சுற்றியுள்ள ஏரிகளுக்கு சொட்டு தண்ணீர் கூட மழையால் கிடைக்கவில்லை. இதனால், கனமழை பெய்தும் கூட செட்டிக்கரை, சோலைக்கொட்டாய், குட்டூர், செம்மனஅள்ளி, மூக்கனூர் ஆகிய பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இங்குள்ள விவசாய கிணறுகளில், தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால், இப்பகுதி விவசாயிகள் லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி, பயிர்களுக்கு ஊற்றுகின்றனர்.