கோவில்பட்டி, பிப். 6: கோவில்பட்டி சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதையடுத்து, தமாகாவினர் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். கோவில்பட்டி நகரில் இளையரசனேந்தல் மெயின்ரோடு ரயில்வே சுரங்கப்பாதை வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள், மினிபஸ்கள், ஆட்டோ, வேன், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள அதிகளவில் செல்கின்றன. சுரங்கப்பாதையின் இருபுற தடுப்பு சுவர்கள் வழியாக, அருகில் தெருக்களின் வாறுகால் கழிவுநீர் கசிந்து, சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கின்றன. இதனால் சுரங்கப்பாதை கொசுக்களிடம் புகலிடமாக மாறியுள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் வாகனங்களில் செல்வோர் பெரிதும் அவதிப்படுகின்றனர். பல மாதமாக சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றாததை கண்டித்து தேங்கிய கழிவுநீரில், நேற்று (5ம் தேதி) மாடுகளை குளிப்பாட்டும் போராட்டம் நடத்த இருப்பதாக தமாகாவினர் அறிவித்திருந்தனர்.