தர்மபுரி, ஜன.28: தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, மாணவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி இந்திய மாணவர் சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறோம். கல்லூரியில், அத்தியாவசிய தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் சரியான முறையில் செய்யவில்லை. இதனால், கழிவறை மற்றும் தண்ணீர் வசதியின்றி தவித்து வருகிறோம். வகுப்பறைகளை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். இலவச நாப்கின் வழங்க வேண்டும். சேலம் மெயின்ரோட்டில் கல்லூரி முன்பு வேகத்தடையை மீண்டும் அமைக்க வேண்டும். காலி பணியிடங்களுக்கு பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். தொலை தூரத்தில் இருந்து வரும் மாணவர்களின் வசதிக்காக கல்லூரி வளாகத்தில் கேன்டீன் அமைக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்க தொகையை உரிய காலத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.