சிதிலமடைந்த பாரதிபுரம் சாலையை சீரமைக்க கோரிக்கை

தர்மபுரி, ஜன.24: குண்டும், குழியுமாக உள்ள பாரதிபுரம் 60 அடி சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட பாரதிபுரம் 60 அடி சாலையில் அரசு அரிசி குடோன், அரசு போக்குவரத்து கழகம், ஓட்டல், டீக்கடைகள், மெஸ், பல சரக்கு கடைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த சாலை வழியாக அரிசி குடோனுக்கு 100க்கணக்கான லாரிகள், அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு 100க்கும் மேற்பட்ட பஸ்கள், கார்கள், டூவீலர்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக 60 அடிசாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது.இதனால் பைக், ஸ்கூட்டர், சைக்கிளில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க கோரி, நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனாலும் ஒரு ஆண்டாக சாலையை சீரமைக்கவில்லை. இந்த சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக மாறி விட்டதால், உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: