கோவை, ஜன.23: கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட, 50 மைக்ரான் தடிமனுக்கு குறைவான கேரி பேக், பிளாஸ்டிக் டம்ளர், கவர் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்க, விற்க, பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட அளவில் பிளாஸ்டிக் கவர் பயன்பாடு கணிசமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. கோவை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் கண்டுகொள்ளாத நிலையில் பிளாஸ்டிக் கேரி பேக், கவர், மைக்ரோ ஓவன் கேரி பேக் உள்ளிட்ட தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ரகசியமாக தயாரித்து விற்பனைக்கு வருவதாக தெரிகிறது.
இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் கூறுகையில், ‘‘ஓட்டல்களில் கேரி பேக், பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தக்கூடாது என பல முறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிலர் மெட்டல் சில்வர் (மல்டி காம்பவுண்ட் பிளாஸ்டிக் ) கவர் பயன்படுத்துகிறார்கள். இதை பயன்படுத்தக்கூடாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பேப்பர் கப்களில் பிளாஸ்டிக் கவர் பூச்சு உள்ளது. இவற்றையும் பயன்படுத்த அனுமதி கிடையாது. துணி பை எனக்கூறி மைக்ரோ ஓவன் வகையிலான பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துகிறார்கள். இவற்றை தயாரிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. அரிசி மூட்டைகள் அதிக தடிமன் உள்ள மைக்ரோ ஓவன் பிளாஸ்டிக் பேக்கில் தயாரிக்கப்படுகிறது. இவற்றை தடுப்பது குறித்து ஆலோசனை நடக்கிறது’’ என்றனர்.