நள்ளிரவில் பஸ் ஸ்டாண்டில் சுற்றித்திரிந்த மாணவன் மீட்பு

தர்மபுரி, ஜன. 23: நள்ளிரவில் பஸ் ஸ்டாண்டில் சுற்றித்திரிந்த மாணவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். தர்மபுரி ராமையகவுண்டர் தெருவை சேர்ந்தவர் சுந்தரராஜ் மகன் மிதுன்குமார் (13). இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 8ம் வகுப்பு படித்து வருகிறார். மிதுன் குமார் நேற்று முன்தினம் நள்ளிரவு, தர்மபுரி பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்தார். அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் விசாரித்த போது, தன்னை சிலர் கடத்தி வந்ததாகவும், அவர்களிடம் இருந்து தப்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மாணவரை காவல் நிலையம் அழைத்து சென்ற டவுன் போலீசார், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். காவல் நிலையம் வந்த பெற்றோர் விசாரித்ததில், பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் வீட்டிற்கு செல்லாமல் மிதுன்குமார் வெளியே சுற்றியது தெரியவந்தது. இதனையடுத்து, அவருக்கு அறிவுரை கூறிய போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: