கிருஷ்ணகிரி, ஜன.22: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை(23ம்தேதி) ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதியதாக பதவியேற்றுள்ள கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கு மாவட்ட அளவிலான பல்துறை அலுவலர்கள் மூலம் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி நாளை(23ம் தேதி) நடைபெற உள்ளது. அதன்படி, ஓசூரில் உள்ள மீரா மஹாலில் நடக்கும் பயிற்சியில் ஓசூர், தளி, கெலமங்கலம் மற்றும் சூளகிரி பகுதியைச் சேர்ந்த 146 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கும், கிருஷ்ணகிரியில் உள்ள மீனாட்சி மஹாலில் நடக்கும் பயிற்சியில், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி மற்றும் காவேரிப்பட்டணம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 186 தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.