கரூர் பேருந்து நிலையத்தில் தேங்கி கிடக்கும் கழிவு நீரால் பயணிகள் கடும் அவதி

கரூர், ஜன. 22: கரூர் பேருந்து நிலையத்தில் கடைகளின் கழிவுநீரால் பயணிகள் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். கரூர் பேருந்து நிலையத்தில் 40க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. உணவகம், டீக்கடைகள் என பல வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கானோர் வேலைக்காக வந்து செல்கின்றனர். எப்போதும் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. மேலும் அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. எனினும் அப்போது மட்டும் சுண்ணாம்பு பவுடர் தெளித்து வைத்து சமாளிக்கின்றனர். பிற சமயங்களில் கடைகளில் உள்ள கழிவுநீர் வெளியேறுகிறது. கழிப்பிடத்தில் இருந்தும் கழிவுநீர் வெளியேறி பேருந்து நிலையத்தில் தேங்குகிறது. இதனால் மூக்கைப்பிடித்தபடியே பயணிகள் சென்று வரும் நிலை உள்ளது. கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் சுகாதாரமற்ற முறையில் காணப்படும் நிலையை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: