குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்

குளித்தலை, ஏப்.23: குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சிவதலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற 1017 அடி உயரம் கொண்ட சுரும்பார் குழலி சமேத ரத்தினகிரீஸ்வரர் கோயில் கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலையில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 12 நாள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு சித்திரை தேர்த்திருவிழாவுக்கான கால்கோல் விழா கடந்த 4ம் தேதி நடந்தது. தொடர்ந்து கடந்த 14ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து உற்சவர் சுவாமி அடிவாரத்திற்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி மலையை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். கடந்த 18ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று அதிகாலை 5:30 மணிக்கு மேல் காலை 7 மணிக்குள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானனோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கரூர் மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள், பக்தர்கள், குடிபாட்டுக்காரர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் ரமணி காந்தன், செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) அமரநாதன் மற்றும் கோயில் குடிபாட்டுக்காரர்கள், உபயதாரர்கள், பணியாளர்கள் செய்து இருந்தனர்.

The post குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: