தர்மபுரி, ஜன.21: சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், 31வது சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் உயிர் பாதுகாப்பு குறித்து 250 மகளிர் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசத்துடன் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை கலெக்டர் மலர்விழி கொடியசையத்து துவக்கி வைத்தார். பேரணி இலக்கியம்பட்டி, பாரதிபுரம், அரசு மருத்துவமனை, நெசவாளர் காலனி வழியாக 4 ரோடு பகுதியில் நிறைவடைந்தது. இப்பேரணியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, ஏடிஎஸ்பி சுஜாதா, வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், உதவித் திட்ட அலுவலர்கள்(மகளிர் திட்டம்) கணேசன், காமராஜ், ராஜீவ்காந்தி, சிவக்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மணிமாறன், முனுசாமி, பன்னீர்செல்வம், ராஜாமணி, காவல் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். வழிநெடுகிலும் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.