தர்மபுரி, ஜன.20: பொங்கல் பண்டிகை விடுமுறை நேற்றுடன் முடிந்த நிலையில், தர்மபுரியில் இருந்து சேலம், சென்னை, பெங்களூரு மற்றம் ஓசூர் செல்லும் பஸ், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் பண்டிகையையொட்டி, பல்வேறு இடங்களில் தங்கியிருந்து பணியாற்றி வருபவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வந்திருந்தனர். குறிப்பாக தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் திருப்பூர், கோயம்புத்தூர், சென்னை உள்பட பல்வேறு இடங்களிலும், கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலும் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கு வந்திருந்தனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறை நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, அனைவரும் பணியிடங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதேபோல், வெளியூர்களில் உள்ள கல்வி நிலையங்களில் பணியாற்றி வரும் மாணவ- மாணவிகளும் புறப்பட்டனர். அனைவரும் ஒரே நேரத்தில் புறப்பட்டுச் சென்றதால் தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல், ரயில் நிலையத்திலும் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.