தர்மபுரி, ஜன.19: தர்மபுரி மாவட்டத்தில் மழை பெய்தும் நீர்வரத்தின்றி இலளிகம் ஏரி வறண்டு கிடப்பதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் இலளிகம் ஏரிக்கு மழைக்காலங்களில் கோம்பை ஏரியில் இருந்து நீர்வரத்து இருக்கும். கடந்த பல ஆண்டுகளாக இலளிகம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்துகொண்டே வந்து, கடந்த சில ஆண்டுகளாக இலளிகம் ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. இதனால் இலளிகம் ஏரியை நம்பி பாசனம் செய்யும், சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாயிகள் கடும் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர். நடப்பாண்டில் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் நல்ல மழை பெய்திருந்த போதும், இலளிகம் ஏரிக்கு நீர்வரத்து இல்லை. கோவிலூர் ஏரி, அதியமான்கோட்டை, ஏரி, ஜெட்டிஅள்ளி ஏரி, தடங்கம் ஏரி என பல ஏரிகள் நிரம்பிய போதும் இலளிகம் ஏரிக்கு நீர்வரத்து இன்றி வறண்டு கிடப்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.