தர்மபுரி, ஜன.13: தர்மபுரி மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, இதுவரை 450 தனித்தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. ஏற்கனவே, 10ம் வகுப்பு தேர்வை பழைய பாடத்தில் எழுதி, தேர்ச்சி பெறாதவர்கள் வரும் மார்ச் மற்றும் ஜூன் பருவங்களில் நடைபெறும் பொதுத்தேர்வினை, பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. இத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு சேவை மையங்களில், ஆன்லைன் மூலம், ஜனவரி 6ம் தேதி முதல், 13 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது.