தர்மபுரி, ஜன.13: பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு அரவையை தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், 25 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும், அரூர் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும் கரும்பு பதிவு செய்து, ஆலை நிர்வாகம் வெட்டி எடுத்த பின்னர், மீதமுள்ள கரும்புகளை, திருவண்ணாமலை செங்கத்தில் உள்ள கரும்பு ஆலைக்கு விவசாயிகள் கொண்டு செல்வார்கள். தற்போது, தர்மபுரி மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து, சுமார் 8 ஆயிரம் ஏக்கர் அளவே உள்ளது. பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அரவை காலத்தில், தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, மல்லாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் ஆயிரக்கணக்கான டன் கரும்புகளை அரவைக்கு கொண்டு வருவார்கள். தமிழகத்தில் உள்ள 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில், முக்கிய இடத்தை இந்த ஆலை வகித்து வந்தது. ஆண்டுக்கு 3.80 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆலையின் அரவை இலக்கை எட்ட வேண்டிய கரும்பு எடை எண்ணிக்கை, படிப்படியாக டன் கணக்கில் குறைய தொடங்கியது.